போலி மருந்து சீட்டினை பயன்படுத்தி முறைகேடாக மாத்திரை பெறமுயற்சி
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் போலி வைத்தியர் மருந்து சீட்டை தயாரித்து முறைகேடாக விலை உயர்ந்த நோய் வலிக்கான றமடோல் (TRAMADOL) என்ற மாத்திரையை தனியார் ஒருவரை வைத்து பெற்று கொள்ள முயற்சித்த வெளிநோயாளர் பிரிவில் கடமையாற்றி வரும் ஆண் சிற்றூழியர் ஒருவரை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த மாத்திரை சத்திரசிகிச்சை செய்யப்பட்ட பின்னர் , மற்றும் வலி, மனநலன் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மாத்திரை வைத்தியரின் மருந்து சீட்டு இல்லாமல் வைத்தியசாலை மருந்தகத்திலே வெளியிலுள்ள பாமசிகளிலே பெற்றுக் கொள்ளமுடியாது.
இவ்வாறான நிலையில் குறித்த மாத்திரையை பெற்றுக் கொள்வதற்காக வைத்தியரின் மருந்து சீட்டை போலியயாக தயாரித்து அதனை அவருடைய பிரதேசத்தைச் சேர்ந்த ஆண்களை வரவழைத்து வைத்தியசாலை மருந்தகத்தில் நீண்ட நாட்களாக பெற்று வந்துள்ளார்.
இதனையடுத்து வைத்தியசாலை மருந்தகத்தில் மருந்து மாத்திரை வழங்குவபர்கள் குறித்த வைத்தியரின் மருந்து சீட்டு போலியானது எனவும் அதனை தயாரித்து முறைகேடாக மாத்திரையை பெற்றுவந்த வெளிநோயாளர் பிரிவில் கடமையாற்றி வந்த ஆண் சிற்றூழியரை கண்டறிந்தனர்.
இது தொடர்பாக வைத்தியசாலை பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதையடுத்து சம்பவதினமான நேற்று வழமைபோல குறித்த சிற்றுர்ழியர் மாத்திரையை பெற்றுக் கொள்வதற்காக அவருடைய ஊரைச் சேர்ந்த ஒருவரை வரவழைத்து அவரின் நோய்க்கு குறித்த மாத்திரையை வழங்கும்படி வைத்திய மருந்து சீட்டை தயாரித்து அவருக்கு உதவி செய்வுத போல அந்த மருந்து சீட்டுடன் அவரைக் கூட்டிக் கொண்டு வைத்தியசாலை மருந்தகத்துக்கு சென்றுள்ளார்.
இதன் போது மருந்து வழங்குபவர்கள் அந்த மருந்து சீட்டை வாங்கி கொண்டு காத்திருக்கும்படி தெரிவித்துக் கொண்டு வைத்திய பணிப்பாளருக்கு அறிவித்ததையடுத்து அங்கு பொலிசார் வரவழைக்கப்பட்டு முறைகேடாக போலி மருந்து சீட்டு தயாரித்து மாத்திரை பெற்றுக் கொள்ள முயற்சித்த சிற்றூழியரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட நபர் நீண்ட காலமாக குறித்த மாத்திரையை பெற்று வந்துள்ளதுடன் வலி நோவுக்கு பாவிக்கும் குறித்த மாத்திரையை போதைக்காக பாவித்து வருவதுடன் அதற்கு அடிமையாகியுள்ளதுடன் அதனை பெற்று வேறு நபர்களுக்கு வழங்கி வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து பொலிசார் குறித்த நபருக்கு எதிராக தண்டனைச்சட்டகோவை 459 பிரிவின் கீழ் போலியாக மருத்துவ சீட்டு தயாரித்த குற்றச்சாட்டின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (4) வழக்கு தாக்குதல் செய்து அவரை ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை எதிர்வரும் 14 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை ஆது தொடர்பாக மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.