பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை தேடிச்சென்ற பொலிஸார் மீது தாக்குதல்
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஒருவரை ஆயதத்தால் தாக்கியதில் தலை, வயிற்று பகுதிகளில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (17) இடம்பெற்றுள்ளது. இவ்வாறு காயமடைந்தவர் உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தராவார்.
நீதிமன்ற பிடியாணை
காயமடைந்தவர் பலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பில் எல்பிட்டி நீதிவான் நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை தொடர்பில் 25 வயதுடை சந்தேக நபரை கைது செய்ய இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சென்றுள்ளனர்.
இதன்போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட போது சந்தேக நபர் அவர்களில் ஒருவரை ஆயதத்தால் தாக்கி விட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.