கொட்டகலையில் பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல் ; பொலிஸ் விசாரணை
கொட்டகலை ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் ராஜேந்திரன் மீது இரண்டு நபர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் கொட்டகலை இலங்கை வங்கிக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதேச சபை உறுப்பினர் ராஜேந்திரனின் கூற்றுப்படி, அவர் தனது காரில் ஏறுவதற்காகச் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவரை வலுக்கட்டாயமாக காரிலிருந்து வெளியே இழுக்க முயன்றுள்ளனர்.

அதன்பின்னர் தாமாகவே கீழே இறங்கியபோது, அவரை இழுத்து தாக்கியதுடன், கடுமையான வலியை ஏற்படுத்தி உயிர் அச்சுறுத்தலும் விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், காரின் சாவியைப் பறித்துக்கொண்டு சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள தனக்கு இந்தச் சம்பவத்தால் உடல் உபாதைகளும் மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளதாகவும், கையில் லேசான முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொட்டகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.