கியூ.ஆர் குறியீடு இன்றி எரிபொருள் ; ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபருக்கு மன்னிப்பு
மிரிஹான பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் மீது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கும் காணொளி நேற்று முன்தினம் (03) சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சந்தேகநபர் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பின்னியர பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில், நேற்று முன்தினம் பிற்பகல்இடம்பெற்றுள்ளது.

கியூ.ஆர்' குறியீடு இன்றி குறித்த எரிபொருள்
காணொளிப் பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு மிரிஹான பொலிஸ் நிலைய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம், கோட்டை- மாதிவெல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், 'கியூ.ஆர்' குறியீடு இன்றி குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வந்துள்ளார்.
இதன்போது, அங்கிருந்த ஊழியர் 'கியூ.ஆர்' குறியீடு இல்லாமல் எரிபொருளை வழங்க முடியாது என மறுத்ததால் ஆத்திரமடைந்த சந்தேகநபர், ஊழியர் மீது தாக்குதலை நடத்தியுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த போது, பாதிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர், இப் பிரச்சினையைப் பொலிஸ் நிலைய மட்டத்தில் சமரசமாகத் தீர்த்து வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து, தாக்குதலை நடத்திய சந்தேகநபருக்குப் பொலிஸாரால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டு, இரு தரப்பினருக்கும் இடையில் சமரசம் செய்து வைக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட ஊழியர் தனது மேலதிக வாக்குமூலத்தின் மூலம் இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல விரும்பவில்லை எனக் குறிப்பிட்டு, வழக்கைக் கைவிட்டுள்ளார்.