ஈரான் அணு மின் நிலையம் அருகே தாக்குதல்
ஈரான் அணு மின் நிலையம் அருகே இன்று காலை அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரானில் உள்ள புஷேர் அணு மின் நிலையத்தின் அருகே இன்று காலை நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் அங்குள்ள கட்டிடம் சேதமாகி காவலாளில் ஒருவர் உயிரிழந்ததாக ஈரான் அணுசக்தி மையம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இதுவரை 4 முறை தாக்குதல்கள்
இந்த போர்ச்சூழலில் அணு மின் நிலையத்தைக் குறிவைத்து இதுவரை 4 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. புஷேர் அணுமின் நிலையம் ரஷ்யாவிடம் இருந்து பெறும் குறைந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைப் பயன்படுத்தி ஈரானுக்குத் தேவையான 1,000 மெகாவாட் மின்சாரத்தை வழங்குகின்றது.
இதில், ரஷ்ய தொழில்நுட்ப வல்லுநர்களும் பணியாற்றுகின்றனர். இது ஈரானின் மின் தேவையில் 1% முதல் 2% வரை பங்களிக்கின்றது. ஈரான் இந்த அணு மின் நிலையத்தை விரிவுபடுத்த முயற்சிகள் எடுத்து வந்தது.
இங்கு, கூடுதலாக 2,000 மெகாவாட் தயாரிக்க மேலும் இரு அணு உலைகளை நிறுவ கடந்த 2019இல் ஈராப் முடிவெடுத்திருந்தது.
இதுமட்டுமின்றி, ஈரான் தென்மேற்கில் உள்ள பெட்ரோகெமிக்கல் மையத்தின் மீது அமெரிக்க-இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தவர்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.
மேலும், இதில் சேதத்தின் அளவு இன்னும் கணக்கெடுக்கப்படவில்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.