சுற்றுலா வீசா மூலம் மாணவர்களை ஏமாற்றியவர் கைது!
சுற்றுலா வீசா மூலம் மாணவர்களை ரஷ்யாவுக்கு அழைத்துச் சென்று ஏமாற்றி பண மோசடி செய்ததாகக் கூறப்படும் நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வத்தளை, ஹுனுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபரொருவரே நேற்று (20) நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்யா பொலிஸாரும் விசாரணை
கைதானவர் கந்தானை பிரதேசத்தில் மாணவரொருவரிடம் ரஷ்யாவில் உயர் கல்வி பெற்றுத் தருவதாகக் கூறி 21 இலட்சத்து 95 ஆயிரம் ரூபா மோசடி செய்துதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.
அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபருக்கு எதிராக மாத்தறை பொலிஸ் தலைமையகத்தில் 17 முறைப்பாடுகளும், குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் 2 முறைப்பாடுகளும், குருணாகல் பொலிஸ் நிலையத்தில் 3 முறைப்பாடுகளும், நாராஹென்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அதோடு வாதுவை , அம்பாறை மற்றும் மொரட்டுவை ஆகிய பொலிஸ் நிலையங்களிலும் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சந்தேக நபர் ரஷ்யாவிற்கு அழைத்துச் சென்ற மாணவரொருவரை கத்தியால் குத்தி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் ரஷ்யா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து சந்தேக நபர் ரஷ்யாவிலிருந்து தப்பித்து விமானம் மூலம் நேற்று (20) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததையடுத்து நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.