ராஜபக்க்ஷ குடும்பத்துக்கு பேரிடி; இருவருக்கு பிடியாணை உத்தரவு!
முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகனும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினருமான ஷமிந்திர ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்வதற்கான திறந்த பிடியாணைகளை (open warrants) பிறப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் (Airbus) விமானங்களைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் லஞ்சப் புகார்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளின் போது, சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதையடுத்து இந்தப் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டன.

கொழும்பு பிரதம நீதவான் பிடியாணை
ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதம நீதவான் இந்தப் பிடியாணைகளைப் பிறப்பித்தார்.
இந்த உத்தரவை இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைக்குமாறும், சந்தேக நபர்கள் நாட்டிற்குள் வருகை தந்தால் அவர்களைக் கைது செய்து, அது குறித்து ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்குத் தெரிவிக்குமாறும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக 2 மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான கபில சந்திரசேன, மார்ச் 12 ஆம் திகதி ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.