அன்புமணி ராமதாஸ் கைது; போர்க்களமாக மாறிய நெய்வேலி!
தமிழகத்தில் பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து அங்கு வன்முறை வெடித்தது.
பாமகவினர் கற்களை எறிந்து தாக்கியதைத் தொடர்ந்து, போலீஸார் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது.
போர்க்களமாக மாறிய நெய்வேலி
நெய்வேலி என்எல்சி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து பாமக சார்பில் நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் இன்று முற்றுகை போராட்டம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.
என்எல்சி நிறுவனத்துக்குள் போராட்டகாரகள் நுழைவதை தடுத்ததனால் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பாமக தொண்டர்கள், காவல் துறை வாகனத்தை கண்ணாடி அடித்து நொறுக்கினர்.
இதனால் பதற்றமான நிலைமை ஏற்பட்டது. போலிசார் அவர்களை மிரட்டி அடித்த சிறிது நேரத்தில் அன்புமணியை கைது செய்து திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது, பாமகவினர் வாகனம் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் மேலும் பதற்றம் அதிகரித்ததால் போலீசார் அவர்களை கலைந்து போக சொன்னபோதும் பாமகவினர் மறுத்து விட்டனர். தொண்டர்கள் சிலர் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டதால் போலீசார், அவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.
பதிலுக்கு பாமகவினரும் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதால் தண்ணீர் பீச்சியடித்து கலைத்தனர்.
இதன்பின் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.