முல்லைத்தீவில் தீபங்களை ஏற்றிய மக்களுக்கு இராணுவத்தினரால் ஏற்பட்ட நிலை!
முல்லைத்தீவில் தமிழ் மக்களால் அனுஷ்டிக்கபட்ட கார்த்திகை தீப்த்திருநாளை குழப்பும் வகையில் இராணுவத்தினர் செயற்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில்தமிழ் மக்கள் வீடுகளின் முன்பாகவும், தமது தொழில் நிலையங்கள் தோட்ட நிலங்கள் போன்றவற்றில் தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.
இந்நிலையில் முல்லைத்தீவில் பல பகுதிகளில் உள்ள தமிழ மக்கள் வழக்கம் போன்றே கார்த்திகை தீப்த்திருநாளான இன்று (18) இரவு 06 மணிமுதல் வாழைக்குற்றிகளில் சுடர் ஏற்றி கார்த்திகை திருநாளை அனுஷ்டித்துள்ளனர்.
இதன்போதே இராணுவத்தினர் மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் குழப்பமடைந்து தீபம் ஏற்றிய சில வீடுகளுக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு அச்சுறுத்தும் விதமாக செயற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, கார்த்திகை மாதத்தில் தங்களது பண்டிகைகளைக் கூட சுதந்தரமாக கொண்டாட முடியாத ஒரு நிலையில், அச்சத்துடன் வாழவேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
மேலும், எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி சனிக்கிழமை அன்று மாவீரர் நாள் நினைவேந்தப்படும் நிலையில், முல்லைத்தீவில் 07 பொலிஸ் பிரிவுகளினூடாக 47 பேருக்கு எதிராக நினைவேந்தலுக்கு தடையுத்தரவு பெறப்பட்டு நேற்று வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.