நாடாளுமன்ற சிறப்புரிமை குறித்து அர்ச்சுனா எம்.பி முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், கிளிநொச்சி பெண்ணொருவரை விபச்சாரி என்று நாடாளுமன்றத்தில் கூறியது விடயம் பேசு பொருளாக மாறியிருந்தது.
ஒரு பெண்ணை விபச்சாரி என்று கூறியது நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு முரணானது என்றும், இது பெண்களை அவமானப்படுத்தும் செயல் என்றும் பெண்ணியவாதியும் மனித உரிமைவாதியுமான அருளலிங்கம் சுவாஸ்திகா கண்டித்திருந்தார்.
நாடாளுமன்ற சிறப்புரிமை
அத்தோடு இதனை நாடாளுமன்ற பதிவுகளிலிருந்து நீக்க வேண்டும் என்றும் சுவாஸ்திகா சுட்டிக்காட்டியிருந்தார். இது தொடர்பான விசாரணைகளை பலரும் கோரியிருந்த நிலையில் இந்தப் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற சிறப்புரிமை சிறிதுகாலம் பறிக்கப்பட்டது.
அதன்படி அவருடைய நாடாளுமன்ற உரைகள் வெளியிடப்படாது. அவரும் அதனை தன்னுடைய காணொலிகளில் பதிவிட முடியாது. இந்தத் தடையை நீக்குமாறு அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் நேற்று எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அர்ச்சுனாவின் பெண்களுக்கு எதிரான மோசமான கருத்துக்களுக்கு அர்ச்சுனா மட்டும் பொறுப்பல்ல அவருக்கு நிதியை வாரி வழங்கும் புலம்பெயர்ந்த மக்களும் வாக்களித்தவர்களும் கூட, பெண்கள் தொடர்பான ஆணாதிக்க மனநிலையோடு இருப்பதாக சுவஸ்திகா குற்றம்சாட்டியுள்ளார்.
குறித்த பெண்ணை அவமானப்படுத்த முயன்று தற்போது அவமானப்பட்டுள்ள அர்ச்சுனா இராமநாதன், தன்னுடைய சிறப்புரிமையை மீள வழங்காவிடில் அதற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் சிந்தித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு எதிரான குற்றச்சாட்டை பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தவர் பிரதம கொரடாவான பிமல் ரத்நாயக்க,
அவர் சுவாஸ்திகா சுட்டிக்காட்டியதை தவறாக சுவாஸ்திகாவை நாடாளுமன்றத்தில் அரச்சுனா விபச்சாரி என்று சொன்னதாகக் குறிப்பிட்டார். அதாவது கிளிநொச்சிப் பெண்ணையே அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் விபச்சாரி என்று விபரித்திருந்தார். அர்ச்சுனா இராமநாதன் சுவாஸ்திகாவை பாராளுமன்றத்துக்கு வெளியே விபச்சாரி என்று விபரித்திருந்தார்.
ஆனால் பிமல் ரத்நாயக்க சுவாஸ்திகாவைச் சுட்டிக்காட்டி அர்ச்சுனாவின் சிறப்புரிமையை குறுகிய காலம் தடை செய்ய வைத்தார்.
இந்த அடிப்படையை வைத்துக்கொண்டு குறித்த பெண்ணின் பெயரை குறிப்பிடுவதற்குப் பதிலாக சுவாஸ்திகா என்று தெரிவித்ததை வைத்துக்கொண்டு தன்மீதான ஒழுங்காற்று நடவடிக்கை தவறு என்றும், தான் தமிழர் என்பதால் திட்டமிட்டமுறையில் தனது குரல் ஒடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டு தனது குற்றச்சாட்டை சபாநாயகரிடம் அர்ச்சுனா இராமநாதன் நேற்று கையளித்துள்ளார்.