அமைச்சர் பீரிசை சந்திக்க பேராயர் விதித்த நிபந்தனை!
தனது நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான கலந்துரையாடல் நடைபெறும் என கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பேராயருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அது தொடர்பில் அமைச்சருக்கு எழுதிய கடிதத்திலேயே பேராயர் மேற்கண்டவாரு குறிப்பிட்டுள்ளார். கலந்துரையாடலுக்கான அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனின், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் வெளிப்படையான முறையில் இடம்பெறுகின்றன என்ற நம்பிக்கை தனக்கு வரவேண்டும் என்றும் பேராயர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான நம்பகமான விசாரணைகளின் முக்கியத்துவம் மற்றும் அந்த நம்பிக்கையை கட்டியெழுப்ப, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்த ஆரம்பிக்க வேண்டும் என்றும் கர்தினால் அக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.