கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுவர்களைத் தாக்கும் மற்றொரு நோய்! எச்சரிக்கை
இலங்கையில் நாளாந்தம் ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான பின்னர் மிஸ்-சி எனப்படும் நோய் சிறுவர்களை தாக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ள சுகாதார தரப்பு , இந்நோயிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க பெற்றோர் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து கொழும்பு சீமாட்டி வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் பூஜித விக்கிரமசிங்க தெரிவிக்கையில் , கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு மிஸ்-சி என்ற நோய் தாக்கம் ஏற்படுவது அதிகரித்துள்ளது.
எனினும் சமூகத்தில் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளான சிறுவர்கள் எந்தளவிற்கு உள்ளனர் என்பதை ஸ்திரமாகக் கூற முடியாது. காரணம் பெரும்பாலான சிறுவர்கள் எவ்வித அறிகுறியும் இன்றியே தொற்றுக்கு உள்ளானவர்களாகக் காணப்படுகின்றனர்.
இந்நிலையில் மிஸ்-சி என்ற நோய் தாக்கம் ஏற்பட்டு கால தாமதமாகி சிறுவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதால் உயிரிழக்கும் அபாயமும் அதிகரித்துள்ளது.
எனவே எவ்வித நோய் அறிகுறிகள் தென்பட்டாலும் தாமதிக்காமல் சிறுவர்களை வைத்தியசாலைகளில் அனுமதிப்பதற்கு பெற்றோர் தயங்கக் கூடாது.
சிறுவர் வைத்தியசாலையில் இதுவரையில் கொரோனா தொற்றால் 10 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த 10 பேரும் ஏனைய நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர்.
இவர்களில் நால்வர் கடந்த மாதத்தில் உயிரிழந்துள்ளனர். எனவே பெற்றோர் குழந்தைகள் தொடர்பில் மிக அவதானமாக செயற்பட வேண்டும் என்றார்.