மின்சார கட்டண திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு
இந்த ஆண்டுக்கான மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக நடத்தப்பட்ட அமர்வுகளில் சுமார் 500 பேர் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பித்ததாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய பொதுக் கருத்துக் கூட்டம் செப்டம்பர் 18 ஆம் திகதி தொடங்கியது.
மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு கொழும்பு பண்டாரநாயக்க நினைவு மாநாட்டு மண்டபத்தில் நேற்று (08) இறுதி அமர்வு நடைபெற்றது.
அந்த அமர்வுகளின்போது முன்வைக்கப்பட்ட அனைத்து யோசனைகள் மற்றும் பரிந்துரைகளையும் கருத்தில் கொண்டு, மின்சார கட்டண திருத்தம் குறித்து ஆணைக்குழுவின் இறுதி முடிவு இந்த மாதம் அறிவிக்கப்படவுள்ளது.
இலங்கை மின்சார சபை சமீபத்தில் மின்சார கட்டண திருத்தத்திற்கான தனது முன்மொழிவை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்து, மின்சார கட்டணத்தை 6.8 சதவீதம் அதிகரிக்க முன்மொழிந்துள்ளது.