வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணி தொடர்பில் வெளியான அறிவிப்பு
வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் கே.பி.என்.டி.என். தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலக்கத் தகடுகளை அச்சிடுவதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நிறுவனம், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர வளாகத்தில் அதற்கான இயந்திரங்களை ஏற்கனவே நிறுவியுள்ளது.

தற்போது இதற்கான ஆரம்பகட்ட பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பொதுக் கொள்முதல் விதிகளுக்கு அமைவாக, வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்நுட்பத் தரங்களை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கொள்முதல் செயல்முறை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2024 இல் ஆரம்பத்தில் கோரப்பட்ட கொள்முதல் செயல்முறையின் போது எந்தவொரு ஏலப்பத்திரமும் சமர்ப்பிக்கப்படாததால், கொள்முதல் நடைமுறைகளின்படி அது இரத்து செய்யப்பட்டது. பத்திரிகை விளம்பரங்கள் மூலம் புதிய விலைமனு கோரப்பட்டு, ஏப்ரல் 28 ஆம் திகதி ஏலப்பத்திரங்கள் திறக்கப்பட்டன. இதில் நான்கு நிறுவனங்கள் போட்டியிட்டன.
வாகன இலக்கத் தகடுகள் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையவை என்பதால், சமர்ப்பிக்கப்பட்ட மாதிரிகளின் தரம் மற்றும் தொழில்நுட்ப இணக்கத்தன்மையை பரிசோதிக்க மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொருட்கள் அறிவியல் மற்றும் பொறியியல் துறை மற்றும் இயந்திர பொறியியல் துறை ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு சுமார் இரண்டரை மாதங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, ஏலப் போட்டியில் தெரிவாகாத நிறுவனங்கள் முன்வைத்த மேன்முறையீடுகளை அடுத்து, கொள்முதல் மேன்முறையீட்டுச் சபை மேலதிக சுயாதீன சோதனைகளை நடத்துமாறு உத்தரவிட்டது.
அதன்படி, தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனத்தினால் இரண்டு மாதங்கள் முழுவதும் இந்த மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

தொழில்நுட்ப வல்லுநர்கள், ஏல மதிப்பீட்டுக் குழு மற்றும் உயர் மட்டக் கொள்முதல் குழு ஆகியவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில், South Asian Technologies (Pvt) Ltd நிறுவனத்திற்கு ஐந்து வருட காலத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
2026 ஜனவரி 20 அன்று இந்த ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டு, 2026 மார்ச் 10 அன்று உத்தியோகபூர்வமாக கையெழுத்திடப்பட்டது.
ஒப்பந்தத்தின்படி, கையெழுத்திடப்பட்டதில் இருந்து மூன்று மாதங்களுக்குள் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதால், திட்டமிட்டபடி வரும் ஜூன் 10 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பணிகள் முறைப்படி ஆரம்பிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.