இராணுவத்தை களமிறக்கியதற்கு இதுதான் காரணம்: அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ
இலங்கையில் மே 09 தின சம்பவத்தை தொடர்ந்து இராணுவத்தை களமிறக்காமல் இருந்திருந்தால் மே 10 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் உட்பட100 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கும் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ (Wijeyadasa Rajapakshe) தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் பிரவேசத்தின் பின்னரே பாரிய அழிவு அப்போது தடுக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
காலி முகத்திடல் மே 09 தின சம்பவத்தை தொடர்ந்து அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்களை அழிக்க ஒரு தரப்பினர் தீர்மானித்து, அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலை தயாரித்துள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றது.
இதை அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு (Gotabaya Rajapaksa) அறிவிக்க பலமுறை முயற்சித்தேன். இருப்பினும் அது பயனளிக்கவில்லை. மே 09 சம்பவம் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
மே 10 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் உட்பட ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் உள்ளடங்களாக நூறு அரசியல்வாதிகளின் சொத்துக்கள் மற்றும் வீடுகளை தீக்கிரையாக்க ஒருதரப்பினர் தீர்மானித்திருந்தனர்.
இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன். நாட்டின் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க துப்பாக்கிக்சூட்டை நடத்தும் அதிகாரம் அப்போது இராணுவத்துக்கு வழங்கப்பட்டது.
கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையாக செயற்பட அனுமதி வழங்கப்பட்டது.
ரத்கம, அங்கொட மற்றும் புறகோட்டை ஆகிய பகுதிகளில் 3 துப்பாக்கிக்சூட்டு பிரயோகத்தை இராணுவத்தினர் மேற்கொண்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.