நாட்டில் விலங்குகளுக்கும் ஆபத்து ; வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் அதிகரித்து வரும் வெப்ப நிலையினால் செல்லப்பிராணிகள் மற்றும் பண்ணை கால்நடைகள் மற்றும் பறவைகள் வெப்ப பக்கவாதம், உடலில் நீர்ச்சத்து குறைதல் போன்ற பாரிய சுகாதார அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளதாகக் கால்நடை வைத்தியர் உதித்த விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
விலங்குகளைப் பாதுகாப்பது தொடர்பில் வைத்தியர் உதித்த விஜேசிங்க விடுத்துள்ள முக்கிய ஆலோசனைகள், செல்லப்பிராணிகள் வைத்திருப்போர் பின்வரும் அறிகுறிகள் தென்படுகின்றதா என்பதை அவதானிக்க வேண்டும்.
கண்கள் குழி விழுந்து காணப்படுதல், வாய் உலர்ந்து போதல், இதயத் துடிப்பு வேகமடைதல், சோம்பல் மற்றும் பலவீனம், தீவிர நிலையில், இது உறுப்புச் செயலிழப்பு அல்லது மரணத்திற்கு வழிவகுக்கலாம்.

வெப்பத்தினால் விலங்குகளின் உடலில் இருந்து அதிகளவு நீர் வெளியேறுவதால், அவற்றுக்கு போதியளவு தண்ணீர் வழங்குவது அவசியமாகும். கறவை மாடுகளுக்கு நாளொன்றுக்கு சுமார் 120 லீட்டர் தண்ணீர் தேவைப்படலாம்.
செல்லப்பிராணிகள் ஆரோக்கியமாக இருக்க குறைந்தது 150 மில்லி லீற்றர் நீர் பருபுவதை உறுதிப்படுத்த வேண்டும். பகல் நேரங்களில் செல்லப்பிராணிகளை வீட்டில் விட்டுச் செல்பவர்கள், மின்விசிறிகளை இயங்கவிடுவதுடன் போதிய காற்றோட்டத்தை உறுதி செய்ய வேண்டும்.
பறவைகள் மற்றும் ஏனைய விலங்குகளுக்கு எப்போதும் சுத்தமான குடிநீர் மற்றும் வெப்பத்திலிருந்து தப்பிக்க நிழலான இடங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
பிராணிகளின் உரோமங்களை நனைப்பது அல்லது அவற்றைக் குளிக்க அனுமதிப்பதன் மூலம் உடல் வெப்பத்தைக் குறைக்க முடியும். கடும் வெப்பம் நிலவும் நேரங்களில் விலங்குகளைக் கடினமான உடற்பயிற்சிகள் அல்லது வேலைகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக குட்டிகள், வயதான விலங்குகள் மற்றும் நோய்வாய்ப்பட்ட விலங்குகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் என வைத்தியர் விஜேசிங்க வலியுறுத்தியுள்ளார்.