ஜனாதிபதியிடம் மருந்தெட்டுவே ஆனந்த தேரர் விடுத்துள்ள வேண்டுகோள்!
கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை முன்னேற்றவும் பல ஜனாதிபதி செயலணிகள் உள்ளன.
ஆனால் ஒன்றாலும் பயனில்லை. கொரோனா தேசிய பிரச்சினையாக கருதி சர்வகட்சி மாநாட்டை நடத்துமாறு ஜனாதிபதியிடம் பணிவுடன் கோரிக்கை விடுத்துள்ளோம்.
பஷில் ராஜபக்ஷ நிதியமைச்சராக பதவியேற்றபோது நாட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். இன்று அந்த மகிழ்ச்சி தவறானது என உணரப்பட்டுள்ளது என அபயராம விகாராயின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
அபயராம விகாரையில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இன்று பல செயலணிகள் உள்ளன.
ஆனால் எதிலும் பயன்கிடைக்கவில்லை. கொவிட் பிரச்சினைக்கு தீர்வு காண சர்வ கட்சி மாநாட்டை நடத்துவது அவசியமாகும். அரசியல் மட்டத்தில் முரண்பட்டுக் கொள்ளும் தருணம் இதுவல்ல ஆகவே தற்போதைய நிலையை ஒரு தேசிய பிரச்சினையாக கருதி செயற்பட்டால் மாத்திரமே தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். சுகாதார அமைச்சு பலவீனமடைந்துள்ளது.
சுகாதார அமைச்சில் உள்ள குறைப்பாடுகளுக்கு தீர்வு காணாமல் சிறந்த சுகாதார சேவையை எதிர்ப்பார்க்க முடியாது. செல்வத்தை வழங்குமாறு மக்கள் கோரவில்லை.
உயிர்வாழ பாதுகாப்பு சூழலை ஏற்படுத்துமாறும், மூன்று வேளை உணவு அல்ல ஒரு வேளை உணவையாவது பெற்றுக் கொள்வதற்கான சூழலையே மக்கள் கேட்கிறார்கள். அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நிதியமைச்சராக பதவியேற்கும் போது மக்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். ஆனால் இன்று அது தவறு என்று எண்ணுகிறார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
சீனியின்விலை என்றும் இல்லாத அளவிற்கு உயர்வடைந்துள்ளது.இதற்கு யார் பொறுப்பு கூறுவது.
அத்தியாவசிய பொருட்களின் விலை இன்னும எந்தளவிற்கு அதிகரிக்கப்படும்என்பதை குறிப்பிட முடியாது.என்றார்.