முடங்கிய தந்தை...காலை இழந்த தாய்; இலங்கையில் பலரையும் வியக்க வைத்த 11 வயது சிறுவன்
வயது முதிர்ந்த பெற்றோரை வயோதிபர் இல்லங்களுக்கு அனுப்பிவிடும் பிள்ளைகள் வாழும் இக்காலத்தில் இலங்கையில், வசிக்கும் 11 வயது மாணவன் நடக்க முடியாத தன் தந்தையையும், காலை இழந்த தாயையும் பராமரித்து வருகின்றமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலி, இமதுவ பிரதேச செயலகப் பிரிவின் ஹட்டங்கல கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் நிம்சர ரவிந்து பிரபாத் என்ற 11 வயது சிறுவன் தொரபே மேல் நிலைப் பாடசாலையில் 6ஆம் வகுப்பில் கற்று வரும் நிலையில் பாடசாலை படிப்பை விட அவருக்கு நிறைய வேலை இருப்பதாக கூறப்படுகின்றது.
குடும்ப சுமைகளை தாங்கும் சிறுவன்
நிம்சரவின் தந்தை சில வருடங்களுக்கு முன்பு மரத்தில் இருந்து விழுந்தமையினால் ஒரே இடத்தில் முடங்க நேரிட்ட நிலையில் குடும்ப சுமைகளை அம்மா ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் துரதிர்ஷ்டவசமாக, சில மாதங்களுக்கு முன்பு, அவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு அவரது காலை இழக்க வேண்டியிருந்தது. இப்போது நிம்சரவின் அப்பா மட்டுமின்றி அம்மாவும் ஒரே இடத்தில் முடங்கியுள்ளனர்.
தற்போது 11 வயது நிம்சர அப்பா, அம்மாவின் அனைத்து வேலைகளையும் செய்து அவர்களை பராமரித்து வருகின்றார். நிம்சரவின் பெற்றோர் இருவருக்கும் ஊனமுற்றோர் உதவித்தொகையை பெற்று வருகின்றனர்.
அந்த பணத்தில் நிம்சர குடும்பச் சுமைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு குடும்பத்தை தாங்கி வருகின்றார். எத்தனை தடைகள் வந்தாலும் பாடசாலை செல்வதை நிறுத்துவதில்லை.
அதிகாலையில் எழுந்து அப்பா, அம்மா செய்யும் வேலைகள் அனைத்தையும் செய்து, உணவு சமைத்து விட்டு பாடசாலைக்கு சென்று வருகின்றார்.
இந்த நிலையி்ல நிம்சரவின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு காலி மாவட்ட செயலாளர் தர்மசிறி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அதேவேளை பெற்றோர்களை பாரமென நினைத்து முதியோர் இல்லங்களுக்கு அனுப்பும் பிள்ளைகளுக்கு இச்சிறுவனின் செயல் சாட்டையடியாக அமைந்துள்ளது.