தீயிட்டு கொளுத்தப்பட்ட வீடு ; அதிகரித்த பலி எண்ணிக்கை ; அதிர்ச்சி கொடுக்கும் பின்னணி
மகரகம, பமுனுவ வீதியில் உள்ள இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்து, வீட்டின் வாடகை தொடர்பான முரண்பாடு காரணமாக வீட்டின் உரிமையாளராலேயே ஏற்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீண்டகாலமாக வீட்டின் உரிமையாளருக்கும், வாடகைக்கு இருந்தவர்களுக்கும் இடையில் முரண்பாடு நிலவி வந்தமை தொடர்பாக மகரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வீட்டின் உரிமையாளரும் பலி
மகரகம - பமுனுவ வீதியில் உள்ள வீடொன்றின் மேல் தளத்திலேயே இந்தத் தீ பரவியது. பின்னர் அதனைக் கண்ட பிரதேச மக்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தனர்.
இதன்போது வீட்டிற்குள் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகி இருந்த இரண்டு ஆண்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் வீட்டின் உரிமையாளரும், வாடகைக்கு தங்கியிருந்த குடும்பத்தின் தலைவருமே இவ்வாறு தீக்காயங்களுக்கு உள்ளாகினர்.
எனினும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் வீட்டின் அறையொன்றிற்குள் குறித்த குடும்பத் தலைவரின் 55 வயது மனைவியும் 16 வயது மகளும் உயிரிழந்த நிலையில் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
அதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 76 வயதான வீட்டின் உரிமையாளரும் உயிரிழந்துள்ளதாக மகரகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மகரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.