அம்பாறையை உலுக்கிய பயங்கர சம்பவம்: சந்தேக நபர்கள ஐவர் அதிரடி கைது!
அண்மையில் அம்பாறை பேருந்து நிலையத்திற்கு அருகில் காத்திருந்த நபரின் கைகளை கத்தி, வாள்களுடன் வேனில் வந்த சிலர் வெட்டிய சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்கள் அங்கிருந்த மற்றுமொரு நபரை தாக்கிவிட்டு சுற்றியிருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபரும் தாக்கப்பட்ட நபரும் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கைகள் வெட்டப்பட்ட நபரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில், அம்பாறை தலைமையக பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது , 05 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் அவர்கள் பயணித்த வேனையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தற்போது, சந்தேகநபர் ஒருவர் தப்பியோடியுள்ளதுடன் அவரை தேடும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அம்பாறை நகரில் இரு கும்பல்களுக்கிடையிலான தகராறு காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.