13 ஆவது அரசியலமைப்பு தொடர்பில் அமெரிக்க தமிழ் புலம்பெயர்ந்தோர் வலியுறுத்து
இலங்கையின் காலனித்துவ கட்டமைப்பிற்குள் தமிழர்களை சிக்க வைக்கும் 13ஆவது திருத்தம், கூட்டாட்சி அல்லது நிர்வாக சபைகள் பற்றி விவாதிப்பதை நிறுத்துமாறு, சர்வதேச தமிழர் அமைப்பு ஒன்று கோரியுள்ளது.
ஈழத்திலும் உலகப் புலம்பெயர்ந்தோரிலும் உள்ள அனைத்து தமிழர்களிடமும், இந்த கோரிக்கையை முன்வைப்பதாக, அமெரிக்கத் தமிழ் புலம்பெயர்ந்தோர் வலியுறுத்தியுள்ளனர்.
அதற்குப் பதிலாக, காலனித்துவ ஆதிக்கத்தின் கீழ் உள்ள மக்களுக்கு சுயநிர்ணய உரிமை மற்றும் இறையாண்மைக்கான பிரிக்க முடியாத உரிமை உள்ளது என்பதை அங்கீகரிக்கும், ஐக்கிய நாடுகளின் 1960 காலனித்துவ நீக்கப் பிரகடனத்தின் 514ஆவது தீர்மானத்தின் கீழ் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என்று அமெரிக்க தமிழ் புலம் பெயர்ந்தோர் வலியுறுத்தியுள்ளனர்.

காலனித்துவத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், தீவில் மூன்று தனித்துவமான இறையாண்மை கொண்ட இராச்சியங்கள் இருந்தன.
வடக்கில் யாழ்ப்பாணத் தமிழ் இராச்சியம், மத்திய மலைகளில் கண்டி இராச்சியம், மற்றும் தெற்கில் கோட்டே இராச்சியம் என்பனவே அவையாகும்.
எனினும், தமிழர்களின் ஒப்புதல் இல்லாமல், 1833ஆம் ஆண்டில் கோல்புரூக்-கேமரூன் சீர்திருத்தங்கள் மூலம் ஆங்கிலேயர்கள் இந்த நாடுகளை வலுக்கட்டாயமாக ஒரே நிர்வாகத்தில் இணைத்தனர்.
இதனையடுத்து, 1948இல் பிரிட்டன் சுதந்திரம் வழங்கியபோது, அது தமிழர்களின் இறையாண்மையை புறக்கணித்து, சிங்கள உயரடுக்கிற்கு முழு அதிகாரத்தையும் மாற்றியது.
இது ஐக்கிய நாடுகள் 1960 காலனித்துவ நீக்கப் பிரகடனத்தில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட சுயநிர்ணயக் கொள்கையை மீறியது.
இந்த நிலையில், தமிழ் மக்கள் தங்கள் இறையாண்மையை விட்டுக்கொடுக்க ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என அமெரிக்கத் தமிழ் புலம்பெயர்ந்தோர் கூறியுள்ளனர்.
அத்துடன், கொழும்பின் அரசியல் அமைப்பிற்குள் தவறான சமரசங்களை ஏற்றுக்கொண்ட தலைவர்களின் வரலாற்றுத் தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க புலம்பெயர்ந்தோர், ஈழத்தமிழர்களை எச்சரித்துள்ளனர்.
எஸ்.ஜே.வி.செல்வநாயகம், ஜி.ஜி.பொன்னம்பலம் மற்றும் ஏ.அமிர்தலிங்கம் போன்ற பழைய தமிழ்த் தலைவர்கள் ஈழத்தில் கூட்டாட்சி மற்றும் கொழும்பில் நிர்வாக சபைகள் பற்றிப் பேசி, தமிழ் மக்களை ஏமாற்றினர். அந்தக் கருத்துகள் காலனித்துவ அரசியலமைப்பிற்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை அளித்தன.

மேலும் முழு இறையாண்மைக்கான அழைப்பை பலவீனப்படுத்தின என்றும் அமெரிக்க தமிழ் புலம் பெயர்ந்தோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமெரிக்கத் தமிழ் புலம்பெயர்ந்தோர் என்பது ஜனநாயகம், நீதி மற்றும் சர்வதேச சட்ட மற்றும் இராஜதந்திர வழிமுறைகள் மூலம் தமிழர் இறையாண்மையை அமைதியான முறையில் மீட்டெடுப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் தமிழ் அமெரிக்கர்களின் கூட்டமைப்பாகும்.
இந்த அமைப்பு தமிழர் வரலாறு, மனித உரிமைகள் மற்றும் தமிழர் தாயகத்தின் முடிக்கப்படாத காலனித்துவ நீக்கம் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கின்றது என்றும் அமெரிக்க தமிழ் புலம் பெயர்ந்தோர் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ் சுதந்திரத்திற்கான பாதை 13வது திருத்தத்தில் இல்லை, கூட்டாட்சியில் இல்லை, மாறாக ஐக்கிய நாடுகளின் காலனித்துவ நீக்க, செயல்முறை மற்றும் அனைத்து இடங்களிலும் உள்ள தமிழர்களின் ஒற்றுமை மூலம் உள்ளது என்றும், அமெரிக்க புலம்பெயர்ந்த தமிழர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.