கடல்சார் பாதுகாப்பு வலுப்படுத்த அமெரிக்கா–இலங்கை முக்கிய சந்திப்பு
அமெரிக்க பசுபிக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் (Admiral Steve Koehler), நேற்று முதல் பெப்ரவரி 21 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அட்மிரல் கோஹ்லர் தனது மூன்று நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்தச் சந்திப்பின் போது, கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் இரு நாட்டுப் பாதுகாப்புப் படைகளுக்கிடையிலான ஒருங்கிணைந்த செயல்பாடுகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

உலகளாவிய கடல்சார் வர்த்தகப் பாதைகளின் முக்கிய சந்தியில் இலங்கை அமைந்துள்ளதை அமெரிக்கா தனது கவனத்தில் கொண்டுள்ளது.
இந்தநிலையில், இலங்கை பாதுகாப்புப் படைகளின் நிபுணத்துவம் மற்றும் திறன்கள் மீது அமெரிக்கா கொண்டுள்ள நம்பிக்கையை இந்தப் பயணம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பாதியளவு பரப்பளவில் இயங்கும் அமெரிக்க பசுபிக் கடற்படை, கடல்சார் பாதைகளைப் பாதுகாப்பதிலும் இந்து - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கை வகிக்கிறது.