இந்துக்களிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாண ஆளுநரின் அறிவிப்பு
ஒக்டோபர் மாதத்தை இந்து பாரம்பரிய மாதமாக அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாண ஆளுநர் ராய் கூப்பர் (Roy Cooper) அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில்,
இந்து மதம் உலகின் மூன்றாவது பெரிய மதமாகும். உலகளவில் இந்து மதத்தில் நூறு கோடி பக்தர்களும், அமெரிக்காவில் மட்டும் 40 இலட்சம் பக்தர்களும் உள்ளனர்.
இந்து பாரம்பரியம், கலாசாரம், மரபுகள் மற்றும் மதிப்புகள் ஆகியன வாழ்க்கையின் பல பிரச்சினைகளுக்கு விலைமதிப்பற்ற தீர்வுகளை வழங்குகின்றன. மேலும் இந்து மதத்தின் போதனைகளைப் பார்க்கும் இலட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகத்தையும் சிந்தனையையும் தருகிறது.
எங்களுடைய துடிப்பான இந்து அமெரிக்க சமூகம், வடக்கு கரோலினா மாகாண குடிமக்களின் வாழ்க்கையை வளப்படுத்தி பெரும் பங்களிப்பு செய்துள்ளது. இந்தாண்டு ஒக்டோபர் மாதத்தில், வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள இந்து சமூகம், இந்து மதத்தின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை கூட்டாக கொண்டாடும்.
இதன் மூலம் நடப்பு ஒக்டோபர் மாதத்தை, வடக்கு கரோலினா மாகாணத்தில் இந்து பாரம்பரிய மாதமாக' அனைத்து குடிமக்களும் பின்பற்றுமாறு அறிவிக்கிறேன். இவ்வாறு ஆளுநர் ராய் கூப்பர் தெரிவித்துள்ளார்.