அமரகீர்த்தி அத்துகோரளவின் மோதிரங்களை களவாடியவர்கள் சிக்கினர்
மே 9ஆம் திகதி நிட்டம்புவ நகரில் வைத்து படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள அணிந்திருந்த தங்க மோதிரங்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் அணிந்திருந்த இரண்டு தங்க மோதிரங்கள் திருடப்பட்டமை மற்றும் மீகஹகிவுல உள்ளூராட்சி சபைத் தலைவரின் கையடக்கத் தொலைபேசி திருடப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் நிட்டம்புவ, ரன்பொகுணகம பிரதேசத்தில் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் திருடப்பட்ட கைத்தொலைபேசி சந்தேகநபரிடம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதோடு தாக்குதலின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அணிந்திருந்த மற்றுமொரு தங்க மோதிரத்தை திருடிய சந்தேக நபர் ஒருவர் நிட்டம்புவ பிரதேசத்தில் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபர்கள் 30 மற்றும் 38 வயதுடைய நிட்டம்புவ மற்றும் ரன்பொகுனுகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் நேற்று அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை கடந்த மே மாதம் 9ஆம் திகதி நிட்டம்புவ நகரில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 38 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 37 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.