நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு
வெசாக் தினத்தை முன்னிட்டு நாளை சனிக்கிழமை (30) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (31) ஆகிய இரு தினங்களிலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது குறித்து மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பெமரத்ன தெரிவிக்கையில்,

சட்ட நடவடிக்கை
இந்த மதுபான சாலைகள் மூடல் உத்தரவானது இன்று (29) வெள்ளிக்கிழமை மாலை முதல் அமுலுக்கு வருவதுடன், எதிர்வரும் ஜூன் மாதம் 01 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும் வரை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
இந்த உத்தரவை மீறி, சட்டவிரோதமான முறையில் திறக்கப்படும் அல்லது விநியோக உரிம விதிகளை மீறும் மதுபான விற்பனை நிலையங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த மூடல் காலப்பகுதியில் ஏதேனும் மதுபான சாலைகள் விதிகளை மீறி செயற்படுவது அவதானிக்கப்பட்டால், அது குறித்து பொதுமக்கள் 1913 என்ற விசேட குறுந்தகவல் இலக்கத்தின் ஊடாக அல்லது oicoptroom@excise.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் மதுவரித் திணைக்களத்திற்குத் தெரிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.