தரம் 12ல் உயர்தரப் பரீட்சை; தரம் 10ல் சாதாரண தரப் பரீட்சை!
தரம் 12ல் உயர்தரப் பரீட்சையும் தரம் 10ல் சாதாரண தரப் பரீட்சையையும் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்விச் சீர்திருத்தங்களில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்தார்.
பாடசாலையில் தரம் 13 இல் நடைபெறும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் காலங்களில் தரம் 12 இல் நடத்த எதிர்பார்த்துள்ளோம்.
மேலும், தற்போது தரம் 11 இல் நடத்தப்படும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை தரம் 10 இல் நடத்தவும் எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மாணவர்களின் வயதை குறைப்பதே நோக்கம்
பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் மாணவர்களின் வயதை மேலும் ஒரு வருடத்தினால் குறைப்பதே இதன் நோக்கமாகும்.
அதன்படி, தொழில் வாய்ப்புகளுக்காக விண்ணப்பிப்பதில் பட்டதாரிகளாக இளம் வயதிலேயே பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறுவதும் அவர்களுக்கு முக்கியமானது என்பதைக் கூற வேண்டும்.
மேலும், முதலாம் தரத்திற்கு முன்னதாகவே சிறு குழந்தைகளுக்கு (Pre – Grade) வகுப்புகளைத் தொடங்கவும் தயாராக உள்ளோம்.
இன்று பிறக்கும் குழந்தைகள் எதையும் மிக விரைவாகப் புரிந்து கொள்ளும் திறனைக் கொண்டுள்ளதை அடிப்படையாக வைத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்தார்.