10தடவைகள் சுட்டுக்கொல்லப்பட்ட சட்டத்தரணி ; துப்பாக்கிதாரி தொடர்பில் வெளியான பகீர் பின்னணி
கொழும்பின் அக்குரெகொட பகுதியில் 2026 பெப்ரவரி 13ஆம் திகதி சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டாவது துப்பாக்கிதாரி, மேலும் 10 பாரிய குற்றங்களுடன் தொடர்புடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முன்னாள் கடற்படை வீரரான இவர், மொனராகலை - நக்கலை, தம்மவத்த பகுதியில் மறைந்திருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இதன்போது அவருடன் இருந்த மேலும் இருவரும் பிடிபட்டுள்ளனர்.

திடுக்கிடும் தகவல்கள்
இதற்கிடையில் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரிக்கு தங்குமிடம் வழங்கிய வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெதகம, நன்னபுராவ - திவியப்பொல பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து மொனராகலை பொலிஸாரால் சந்தேக நபர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
அவர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார். முன்னதாக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டாவது துப்பாக்கிதாரியை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி அவர் பாலியல் வன்புணர்வு, கொலை, கொள்ளை என்று பல சம்பவங்களில் அவர் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.
பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் சிறிதத் தம்மிகவை படுகொலை செய்ய 'கரந்தெனிய சுத்தா' வழங்கிய அறிவுறுத்தலின் பேரில் தாம் செயற்பட்டதாகச் சந்தேக நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.
அத்துடன்,"லாலா" என்பவருடன் இணைந்து தம்மிக மீது தாம் இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.