உண்மையை மறைத்த எயார் இந்தியா; 10 இலட்சம் அபராதம்!
எயார் இந்தியா நிறுவனத்துக்கு இந்திய சிவில் விமான போக்குவரத்து பணியகம் இன்று 10 இலட்சம் இந்திய ரூபா அபராதம் விதித்துள்ளது.
கடந்த 6 ஆம் திகதி பாரிஸிலிருந்து டெல்லி நோக்கி பறந்துகொண்டிருந்த விமானத்தில் இடம்பெற்ற இரு சம்பவங்கள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கத் தவறியதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எயார் இந்தியாவின் எஐ-142 விமானத்தில் இரு சம்பவங்கள் இடம்பெற்றாக இந்திய சிவில் விமான போக்குவரத்து பணியகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
கழிவறையில் சிகரெட்
அவ்விமானத்தில் பயணி ஒருவர், கழிவறையில் சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தமை தெரியவந்தது. ஊழியர்களின் உத்தரவின்படி செயற்படுவதற்கு அவர் மறுத்தார்.
மற்றொரு பயணி, வெற்று ஆசனமொன்றிலும் பெண் பயணி ஒருவரின் போர்வையிலும் சிறுநீர் கழித்தார்.
இந்நிலையில் மேற்படி இரு சம்பவங்கள் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவிக்கத் தவறியமைக்காக எயார் இந்தியாவுக்கு 10 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த நவம்பர் மாதம் நியூயோர்க் - டெல்லி விமானத்தில் வயதான பெண்ணொருவர் மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்தமை தொடர்பில், எயார் இந்தியாவுக்கு 4 நாட்களுக்கு முன் 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.