வடக்கு கிழக்கில் கதவடைப்பு பல இடங்களில் புறக்கணிப்பு ; யாழில் இயல்பு நிலை
வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற கோரி தமிழரசு கட்சியினால் , பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் பெருமளவான இடங்களில் இயல்வு நிலை காணப்பட்டன.
முத்துஐயன்கட்டு குளத்தில் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்திற்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பு இருப்பதாகவும் வடக்கு கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னத்தாலையே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்த்து.
வழமைபோன்று இயங்கும் அரச திணைக்களங்கள் , பாடசாலைகள்
எனவே இராணுவத்தினரை வெளியற்றுமாறும் கோரி இலங்கை தமிழரசு கட்சியின் பொது செயலாளர் எம். ஏ சுமந்திரன் வடக்கு கிழக்கில் பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.
முன்னதாக 15ஆம் திகதி கதவடைப்பு போராட்டம் என அறிவிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் மன்னார் மடு தேவாலய பெருநாள் என்பதால் , 18ஆம் திகதியான இன்றைய தினத்திற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் கதவடைப்பு போராட்டத்திற்கு தம்முடன் கலந்து ஆலோசிக்கவில்லை என வர்த்தக சங்கங்கள் , யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் , பொது அமைப்புகள் குற்றம் சாட்டி , போராட்டத்திற்கு ஆதரவு வழங்க மறுத்திருந்தனர்.
அந்தவகையில் இன்றைய தினம் (18) காலை சில இடங்களில் கடைகள் பூட்டப்பட்டு இருந்தாலும் , பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டு இருந்தமையும் அவதானிக்க முடிந்தது.
மேலும் போக்குவரத்து சேவைகள் வழமை போன்று இயங்கி வருவதுடன் , அரச திணைக்களங்கள் , பாடசாலைகள் என்பனவும் வழமை போன்று இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .