பொதுமக்கள் அலைய வேண்டிய அவசியம் இல்லை ; டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிரடி திட்டம்
தேசிய தரவுப் பரிமாற்ற மையம் ஒன்றை நிறுவுவதற்கான அமைச்சரவைப் பத்திரம் இந்த மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு
பொதுத்துறையை டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வலையமைப்பிற்குள் கொண்டுவரும் தற்போதைய முயற்சிகளின் ஒரு பகுதியாக, அரச நிறுவனங்களுக்கு இடையே தரவுகளைப் பகிர்ந்துகொள்வதை எளிதாக்குவதற்கான சட்ட விதிகளுடன் இந்த முன்மொழியப்பட்ட மையம் அமைக்கப்படும் என்று பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.

இந்தத் தரவுப் பரிமாற்ற மையம் நிறுவப்படுவதன் மூலம், நிறுவனங்களுக்கு இடையே தடையின்றி தரவுகளைப் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த முன்முயற்சி காரணமாக பொதுமக்கள் சேவைகளை எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், ஒரேயொரு பணியை முடிப்பதற்காகப் பொதுமக்கள் பல நிறுவனங்களுக்குச் செல்ல வேண்டிய தேவை இனி இருக்காது என்றும் பிரதி அமைச்சர் மேலும் விளக்கினார்.
இருப்பினும், ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்குத் தரவுகளைப் பரிமாற்றம் செய்வதற்குப் பொதுமக்களின் அனுமதி கட்டாயமாக்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.
தேசிய தரவுப் பரிமாற்ற மையமானது முறையான சட்டக் கட்டமைப்பின் கீழ் நிறுவப்படும் என்றும் அவர் இதன்போது உறுதியளித்தார்.