மலையகத்தில் அதிகரித்து வரும் விபத்துக்கள்
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள மரங்கள் முறிவு மற்றும் கடும் காற்று காரணமாக பல்வேறு அனர்த்தங்கள் இடம்பெற்று வருகின்றது.
இதில் இருவர் மரணமடைந்து மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா பாக்சைட் பகுதியிலிருந்து ஹைபொரஸ்ட் பகுதிக்கு நேற்று (08) சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியின் மீது வீதியோரம் இருந்த மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் மேலும் மூவர் காயங்களுக்கு உள்ளாகி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மரணமடைந்தவர் நுவரெலியா ஹைபொரஸ்ட் பகுதியைச் சேர்ந்த மயில்வாகனம் வயது 66 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் முச்சக்கர வண்டிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதே வேளை உடபுஸ்ஸல்லாவை கலகடபாஹன கிராம சேவகர் பிரிவில் உள்ள வீடு ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் வீடு கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் அதில் வசித்து வந்த நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இவ்வாறு மரணமடைந்தவர் வீரசிங்கலாகே ஹரிச்சந்திர ஆரியபால வயது 56 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சீரற்ற காலநிலையுடன் பல பகுதிகளுக்கு வீசிய காற்று காரணமாக பல வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.