விகாரைக்கு சென்ற தம்பதி ; இரு பிள்ளைகளின் தந்தையை பலியெடுத்த விபத்து
ஹொரணை வைத்தியசாலை சந்திக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில், இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேன் ஒன்றும் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பெல்லபிட்டி பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய ஒல்வின் இந்திரசிறி எனும் தந்தையே உயிரிழந்துள்ளார்.
விகாரைக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர்
மொரகஹேனவில் உள்ள தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற வேன், ஹொரணைலிருந்து அங்குருவாதொட்ட நோக்கி சென்று கொண்டிருந்தது.
இதன்போது, விகாரைக்கு புனித சடங்குக்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர் வலதுபுறம் திரும்ப முயன்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த தம்பதியினர் ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு கணவர் உயிரிழந்துள்ளார்.
வேனின் அதிக வேகமே விபத்துக்கு காரணம் என தெரிவித்த பொலிஸார் , வேனின் சாரதியை கைது செய்ததுடன் மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.