மீகொடை கொடூர விபத்து; தப்பியோடிய சந்தேக நபர்கள் கைது
மீகொடை பகுதியில் இடம்பெற்ற கொடூர விபத்துச் சம்பவத்துடன் தொடர்புபட்டு, தேடப்பட்டு வந்த மேலும் இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கெப் ரக வாகனத்தின் உரிமையாளரும், மற்றுமொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீகொடை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான போதே கைது
அவர்கள் இருவரும் இன்று (6) காலை சட்டத்தரணி ஒருவர் ஊடாக மீகொடை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மே 31 அன்று மீகொட (Meegoda) பகுதியில் உள்ள 'தன்சல்' (தான தர்மம் வழங்கும் இடம்) ஒன்றில் வரிசையில் நின்றிருந்தவர்கள் மீது 'கேப்' (cab) ரக வாகனம் மோதியதில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
அவிசாவளை - கொழும்பு 'ஹை லெவல்' (High Level) வீதியில், மீகொட சந்திக்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றது இதில் ஆறு பேர் உயிரிழந்ததுடன், மேலும் ஏழு பேர் பலத்த காயமடைந்தனர்.
வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டு ஜூன் 1 அன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்; அவர் ஜூன் 16 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விபத்து நடந்தபோது அந்த வாகனத்தில் மேலும் மூன்று பேர் பயணித்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஓட்டுநர் கைது செய்யப்பட்டபோது அவர்கள் வாகனத்தை விட்டுத் தப்பிச் சென்ற நிலையில் இன்று கைதாயுள்ளனர்.