மட்டக்களப்பில் கோர விபத்து: முதியவர் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி கறுவாக்கேணி சந்தியில் சிறைச்சாலை கைதிகளை ஏற்றிச் சென்ற இரு பஸ் வண்டிகள் துவிச்சக்கரவண்டியில் பிரயாணித்த ஒருவர் மீது மோதி விபத்துக்கு உள்ளானதில் துவிச்சக்கரவண்டியில் பிரயாணித்த 60 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று (06) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
களுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய தில்லைநாயகம் இராமச்சந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலன்னறுவையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி இரு சிறைக் கைதிகளை ஏற்றிக்கொண்டு இரு பஸ் வண்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக சம்பவ தினமான இன்று மாலை 4 மணி அளவில் பயணித்த போது வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கறுவாக்கேணி சந்தி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் வீதியில் பிரயாணித்த முதியவர் மீது மோதி விபத்துக்கு உள்ளானதில் முதியவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.
அதில் சிறைச்சாலை பஸ் வண்டி சாரதி ஒருவரை கைது செய்துள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.