கொழும்பில் தோல்வியில் முடிந்த கொலை திட்டம்!
கொழும்பு - மருதானை, பஞ்சிகாவத்தை அம்மன் கோவிலுக்கு அருகில் நேற்று (13) இரவு இனந்தெரியாத இருவர் நபரொருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ள முயன்ற சம்பவம் தோல்வியில் முந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மருதானை, பஞ்சிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரை இலக்கு வைத்தே கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது. இதன்போது துப்பாக்கி செயலிழந்ததால் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.
இனந்தெரியாத இருவர்
மருதானை, பஞ்சிகாவத்தை அம்மன் கோவிலுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் முச்சக்கரவண்டி ஒன்றை பபழுதுபார்த்துக்கொண்டிருந்த நபரொருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ள முயன்றுள்ளனர்.
இதன்போது துப்பாக்கிதாரிகளிடமிருந்த துப்பாக்கி செயலிழந்ததால் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிதாரிகள் இருவரும் தப்பிச் செல்லும்போது அவர்களிடம் இருந்த தோட்டா ஒன்று தரையில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.