காட்டுக்குள் சென்ற இளைஞன் மாயம் ; காயத்துடன் திரும்பிய இளைஞனின் தகவலால் குழப்பம்
நுவரெலியா மாவட்டம் டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேகமலை பகுதியில், காட்டுக்குள் சென்ற இருவரில் ஒருவர் இதுவரை வீடு திரும்பாத நிலையில் இரு குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் டயகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடந்த 10ஆம் திகதி, இரு இளைஞர்கள் காட்டுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
தேடுதல் நடவடிக்கை
அவர்களில் ஒருவர் 11 ஆம் திகதி அன்று மாலை வீடு திரும்பிய நிலையில், அவரது உடலில் சிறிய காயங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திரும்பி வந்த இளைஞரிடம் பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின் போது, அவர் வழங்கும் தகவல்களில் முரண்பாடுகள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல்போன மற்றொரு இளைஞனை தேட, பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து 11, 12, 13 ஆகிய தினங்களில் அதிகாலை முதல் மாலை வரை வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தும், இதுவரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
மேகமலை தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாமல், காணாமல்போன இளைஞனை தேடுவதில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர்.
தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.