தந்தையின் விந்தணுவால் குழந்தை பெற்ற மகன்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இங்கிலாந்தில் இளைஞர் ஒருவர் , தமது தந்தையின் விந்தணுவைப் பயன்படுத்தி தன் மனைவிமூலம் குழந்தை பெற்றுள்ள சம்பவம் தொடர்பில் குழந்தையின் உண்மையான தந்தையை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட வேண்டும்’ என்று வழக்கு தொடுத்து நிலையில் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
தற்போதைய இளம் தலைமுறையினரிடையே குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. மாறிவரும் வாழ்வியல் சூழல்கள், உணவு முறைகள், பரவும் நோய்கள், சத்துக்குறைபாடு, உடல்பருமன், சுற்றுச்சூழல், பணி அமைவிடம், மனஅழுத்தம் எனப் பல காரணங்கள் இதற்கு சொல்லப்படுகின்றது.
குழந்தை வேண்டும் ஆனால் பணமில்லை
குழந்தைப்பேறுக்காக, பல மகப்பேறு தனியார் மருத்துவமனைகள், ஐவிஎஃப் சென்டர்கள் கொள்ளை லாபம் பார்த்துவருகின்றன. எப்படியாவது குழந்தை பெற்றால் போதும் என்ற மனநிலைக்குச் சென்றுவிடும் பலர் பணத்தை தண்ணீராக இறைத்துவருகின்றனர்.
உலகின் மக்கள் தொகை குறைந்து வரும் நிலையில், மக்கள்தொகையை அதிகரிக்க சீனா, ரஷ்யா, ஜப்பான், தென்கொரியா, வடகொரியா உள்ளிட்ட சில நாடுகள் சலுகைகளை வழங்கிவருகின்றன.
இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தமது தந்தையின் விந்தணுவைப் பயன்படுத்தி மனைவிமூலம் குழந்தை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இங்கிலாந்தின் யார்க்ஷயர் பகுதியைச் சேர்ந்த அவர், பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
அவருக்குக் குழந்தைப்பேறு இல்லாத நிலையில், ஐவிஎஃப் சென்டரை அணுகியுள்ளார். அவர்கள் சொன்ன ஆலோசனை மூலம் குழந்தை பெறுவதற்கு அவரிடம் அவ்வளவு தொகை இல்லை எனக் கூறப்படுகிறது.
அதாவது மனைவியை கர்ப்பமாக்க வேறு ஒருவரின் விந்தணுவைப் பெற வேண்டும் எனவும், அதற்குப் பெருமளவில் தொகை வேண்டும் எனவும் அச்செண்டர் கேட்டுள்ளது.
வழக்கு தொடுத்த நகராட்சி
அவரிடம் செலுத்த வேண்டிய தொகை இல்லாததால் தனது தந்தையின் விந்தணுவுடன், தனது விந்தணுவையும் கலந்து மனைவியின் கருமுட்டைக்குள் செலுத்தப்பட்டு அவர்களுக்கு குழந்தை பிறந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தக் குழந்தையின் கருத்தரிப்பில் சந்தேகமடைந்த தெற்கு யார்க்ஷயர் பகுதியின் நகராட்சி நிர்வாகமான பார்ன்ஸ்லி மெட்ரோபாலிட்டன் போரோ கவுன்சில், ’குழந்தையின் உண்மையான தந்தையை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட வேண்டும்’ என்று வழக்கு தொடுத்துள்ளது.
வழக்கு விசாரணையில் தனது தந்தையின் விந்தணுவை பயன்படுத்தியதை அந்த இளைஞரே ஒப்புக் கொண்டுள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘குழந்தையின் உண்மையான தந்தை யார் என்பதை கண்டறிய டிஎன்ஏ சோதனை நடத்தவேண்டிய அவசியமில்லை.
இந்த வழக்கைப் பொறுத்தவரை, குழந்தையின் தந்தை யார் எனக் கேட்டு நகராட்சி நிர்வாகம்தான் மனுத் தாக்கல் செய்துள்ளது. இது நகராட்சி கவுன்சிலுக்கு தேவையில்லாத வேலை. குழந்தையின் பெற்றோர்கள் வழக்கு தொடுத்திருந்தால், டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தலாம்.
மற்றபடி கவுன்சிலின் பேச்சை கேட்டு உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
இந்நிலையில் தந்தையின் விந்தணுவால் மகன் குழந்தை பெற்ற தகவல் இணையவாசிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.