கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோயாளி அடையாளம்
கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோயாளி ஒருவர் நேற்றயதினம் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராமத்தில் வசிக்கும் ஒருவரே எலிக்காய்ச்சல் நோயாளியாக அடையாளம் காணப்பட்டார்.

குருதி மாதிரி பரிசோதனை
குறித்த நபருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றபோது இவரின் குருதி மாதிரி பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே அவருக்கு எலிக்காய்ச்சல் இருப்பது இனங்காணப்பட்டது. இவர் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
வெள்ள நிலைமையைத் தொடர்ந்து எலிக்காய்ச்சல் நோய் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார பிரிவினர் அண்மைக்காலமாக அறிவுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.