போதைப்பொருள், பணம், கூரிய கத்தியுடன் ஒருவர் கைது
போதைப்பொருள் வலையமைப்பை நடத்திவரும் போதைப்பொருள் கடத்தல்காரரும் திட்டமிட்ட குற்றவாளியுமான ஹந்தபாங்கொட ஹதயாவின் பிரதான சகா ஒருவர் ஹெரோயினுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படை தலைமையக முகாமின் (கொழும்பு பிராந்தியம்) விசேட சுற்றிவளைப்பு பிரிவினர் நேற்று (2023.12.06) அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கபுருகொட வீதியில் சோதனையை மேற்கொண்டனர்.
இதன்போது, 8 கிராம் 390 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் கூரிய கத்தியை வைத்திருந்த 43 வயதுடைய ஹோமாகமவைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இவரிடமிருந்து போதைப்பொருள் விற்பனை மூலம் பெறப்பட்டதாக நம்பப்படும் 10,000 ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசியும் கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக அதுருகிரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
சந்தேக நபர் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், தற்போது வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான ஜாகொடவின் தனுஜா சம்பத் என்ற ஹந்தபாங்கொட ஹதயாவின் சகா என தெரிய வந்துள்ளது.