இலங்கையிலும் பாரிய நிலநடுக்கம் ஏற்படலாம்
மியன்மார் போன்று இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படலாம் என்றும், அதற்கேற்ற வகையில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கையிலும் சிறிய அளவிலான நிலநடுக்க நிகழ்வுகளின் பதிவு அண்மித்த காலப்பகுதியில் அதிகரித்து வருகிறது. இலங்கையின் கீழாகவும் இலங்கைக்கு அண்மித்ததாகவும் சிறிய அளவிலான நிலநடுக்க நிகழ்வுகள் பதிவாகி வருகின்றது.
மிகப்பெரிய அளவிலான நிலநடுக்க நிகழ்வு
எனினும் இதுவரை இவை சேதங்களை ஏற்படுத்தவில்லை. ஆனால் என்றோ ஒருநாள் இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்க நிகழ்வு இடம்பெறலாம்.
அதற்கேற்ற வகையில் போதுமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும். ஜப்பான் போன்ற நாடுகளில் இதற்குரிய செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வெற்றியும் பெற்றுள்ளன.
ஆகக்குறைந்தது புவிநடுக்கத்திற்குரிய விழிப்புணர்வு செயற்திட்டங்களை இலங்கையின் அனைத்து மக்கள் மத்தியிலும் முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.
இல்லையேல் 2004ம் ஆண்டின் சுனாமி அனர்த்தத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தது போன்று ஒரு புவிநடுக்க அனர்த்தத்தினாலும் இலங்கையில் ஆயிரக்கணக்கானவர்களின் இறப்பை நாம் தவிர்க்க முடியாது என்பது உண்மை. என மேலும் தெரிவித்துள்ளார்