மட்டக்களப்பு ஊடகவியலாளருக்கு தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல்
மட்டக்களப்பு மாவட்ட சுதந்திர ஊடகவியலாளர் ஒருவருக்கு தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மட்டக்களப்பு சுவிஸ் கிராம பகுதியில் இடம்பெற்ற கொடூர தாக்குதல் சம்பவம் தொடர்பாக செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததை தொடர்ந்தே ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

சுவிஸ் கிராம கொடூர தாக்குதல்
தாக்குதல் சந்தேக நபர்கள் நேற்று முன் தினம் பொலிஸரால் கைது செய்யப்பட்டு நேற்று விடுதலை செய்யப்பட்டதை அடுத்து நேற்று இரவு 12 .30 மணியளவில் அவரது தொலைபேசிஊடாக சந்தேக நபர்களில் ஒருவர் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
கொலையச்சுறுத்தல் தொடர்பாக ஊடகவியலாளர் இன்று (31) மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதுடன் அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் இடத்தில் குறித்த நபர்களே பொறுப்பேற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காலகாலமாக பல அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஊடக பணியினை செய்யும் ஊடகவியலாளர்கள் இவ்வாறு அச்சுறுத்தப்படுவதும் கடத்தப்படுவதும் காணாமல் ஆக்கப்படுவதும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.
இந்நிலையில் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்களை உடன் நிறுத்த வேண்டும் என்றும் ஊடகவியலாளர்களை சுதந்திரமாக செயற்படுவதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குறித்த நபர்களை சட்டத்தின் முன்னிறுத்தி அவர்களுக்கான தண்டனையை வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.