யாழ். பொலிஸ் நிலையம் அருகே அதிர்ச்சி சம்பவம் ; நடுவீதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதல்
யாழ்ப்பாண இளவாலை பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பெரியவிளான் சந்தியில் இன்று (8) பட்டப்பகலில் காவாலிகள் நிறைவெறியில் கடுமையாக மோதிக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், வீதியூடாக பயணித்த பொதுமக்களும் அருகிலிருந்த அயலவர்களும் அச்சமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விளானை பகுதியைச் சேர்ந்த காவாலிகளுக்கும், பண்டத்தரிப்பு பற்றிமா கோயிலடி பகுதியைச் சேர்ந்த காவாலிகளுக்கும் இடையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோதலில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் நிலை தொடர்பான மேலதிக தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
சம்பவத்தையடுத்து, பெரியவிளான் சந்தி ஊடான போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டதுடன், பாதுகாப்பு காரணங்களால் பலர் மாற்றுப் பாதைகளை பயன்படுத்தி பயணித்ததையும் அவதானிக்க முடிந்தது.
இதனிடையே, இப்பகுதிகளில் அண்மைக் காலமாக சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளதுடன், உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.