மனித அலட்சியத்தின் இன்னொரு சாட்சி ; பரிதாபமாக உயிரிழந்த காட்டு யானை
திருகோணமலை, மொரவெவ பகுதியில் 'ஹக்க பட்டாஸ்' எனும் வெடிபொருளைக் கடித்த காட்டு யானையொன்று உயிரிழந்தது.
மொரவெவ D-9 பகுதியில் விழுந்து கிடந்த நிலையில் இந்த காட்டு யானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 8 வயதுடைய இந்த காட்டு யானை, சில தினங்களுக்கு முன்னர் ஹக்க பட்டாஸ் வெடிபொருளைக் கடித்ததால் சுகவீனமடைந்திருந்தது.

அதற்கமைய, உணவருந்த முடியாத நிலையில் இருந்த அந்த யானை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் பன்றிகளைக் வேட்டையாடுவதற்காக சிலர் இந்த ஹக்க பட்டாஸைப் பயன்படுத்துவதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிப்பதுடன், அவ்வாறு வைக்கப்பட்ட பொறியிலேயே இந்த காட்டு யானை சிக்கியிருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கின்றனர்.
மகாவலி வலயத்திற்குப் பொறுப்பான வனஜீவராசிகள் கால்நடை மருத்துவர் கலிந்து ஆராச்சியின் ஆலோசனையின் பேரில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சடலத்தை புதைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.