காலிமுகத்திடலுக்கு அப்பால்; Gota Go Gama போராட்டக்காரர்கள் முன்வைத்த 8 கோரிக்கைகள்!
காலி முகத்திடலில் Gota Go Gama போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது 8 யோசனைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
காலிமுகத்திடலுக்கு அப்பால் எனும் தொனிப்பொருளில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் மற்றும் கோரிக்கைகளில் 8 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவையாவன,
1. ஜனாதிபதி தலைமையிலான ராஜபக்ஷ குழுவினர் தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும்.
2. குறுகிய காலத்திற்கு இடைக்கால அரசாங்கம். அதில் ஊழல் குற்றச்சாட்டுடையவர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படக்கூடாது.
3. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இரத்து செய்யப்பட வேண்டும். இதற்காக அரசியல் யாப்பில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.
4. பொருளாதார சமூக பிரச்சினைகளுக்கு துரித தீர்வு காணப்பட வேண்டும். ஜனநாயகத்தை பலப்படுத்தும் நோக்கில் பிரஜைகள் சபை முறையொன்று உருவாக்கப்பட வேண்டும்.
5. அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடை நிவர்த்திக்க, மக்கள் நலன்சார் வரவு செலவு திட்டம் முன்மொழியப்பட வேண்டும்.
6. சட்டத்தை பிழையாக பாவித்து பிரஜைகளின் உரிமை மற்றும் கருத்து சுதந்திரத்தை மீறும் சகல செயற்பாடுகளையும் உடனடியாக நிறுத்துவதற்கு தேவையான சட்ட திட்டங்கள் உருவாக்கப்படல் வேண்டும்.
7.வாழ்வதற்கான உரிமை மற்றும் சகல தேர்தல்களையும் நீதியாகவும், நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்துவதற்கான சட்ட திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.
8. அடுத்து வரும் தேர்தல்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழுங்கு செய்யும் வகையில் தேர்தல் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பவையே அவையாகும்.