6 ஆயிரம் இந்திய சுற்றுலா பயணிகள் யாழ்ப்பாணம் வருகை!
இந்தியாவில் இருந்து 6000க்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் யாழ்ப்பாணம் வந்துள்ளதாக இந்திய துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.
கொர்டேலியா குரூஸ் கப்பல் சேவையை ஆரம்பித்து 3 மாத காலப்பகுதிக்குள் யாழ்.காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக இந்திய சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இது குறித்து துணைத் தூதரகம் விடுத்துள்ள ஊடக அறிவிப்பில்,
யாழ்ப்பாண நகரத்தில் ஒரு மறக்க முடியாத விடுமுறை
கடந்த ஜூன் 16ஆம் திகதி அதன் ஆரம்ப வருகையிலிருந்து 9 தடவையாக மேற்கொள்ளப்பட்ட அடுத்தடுத்த பயணங்களின்போது, சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாண நகரத்தில் ஒரு மறக்க முடியாத விடுமுறை அனுபவத்தைத் தொடங்கினர்.
அதன் வளமான வரலாற்றுடன், யாழ்ப்பாணம் தென்னிந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளும் கலாசார பிணைப்புகளையும் அனுபவித்தனர். யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்கரைகள் மற்றும் கோவில்களின் அற்புதமான அனுபவத்தை சுற்றுலாப் பயணி பெற்றுள்ளார்.
வட மாகாண சுற்றுலாப் பணியகம் மற்றும் மாவட்ட செயலகத்தின் உதவியுடன் தெல்லிப்பழை பிரதேச செயலகமும் வலி,வடக்கு பிரதேச சபையும் ஏற்பாடுகளை செய்திருந்ததுடன் வட மாகாண ஆளுநர் முயற்சிகளை ஒருங்கிணைத்தார்.
இந்த நிலையில் மேம்படுத்தப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை இப்பகுதியில் உள்ள உள்ளூர் சமூகத்துக்கும் உதவியது மற்றும் தொழில்முனைவோருக்கு புதிய வழிகளை வழங்கியுள்ளதாகவும் துணைத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.