கனடாவில் 6 இலங்கையர்கள் படுகொலை: கொலையாளி பயன்படுத்திய ஆயுதம் தொடர்பில் வெளியான தகவல்!
கனடா தலைநகர் ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தை 5 பேர் உட்பட 6 இலங்கையர்களையும் படுகொலை செய்ய கத்தியையே சந்தேகநபர் பயன்படுத்தியுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த கொலை சம்பவத்திற்கு சந்தேகநபர் ஒரு கத்தியினை பயன்படுத்தினாரா? பல கத்திகள் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் தற்போது ஒட்டாவா பொலிஸார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த கொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான 19 வயதான இலங்கையைச் சேர்ந்த ஃபேப்ரியோ டி சொய்சா நாளையதினம் (15-03-2024) ஒட்டாவா நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.
இதேவேளை, ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் ஒட்டாவா பொலிஸார் பல தவறான தகவல்களை வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த 06-03-2024ஆம் திகதி இரவு கனடாவின் ஒட்டாவா பகுதியில் இலங்கையை சேர்ந்த தாயும், அவரது 4 குழந்தைகளும் மற்றுமொரு இலங்கையரும் கொல்லப்பட்டதுடன் பெண்ணின் கணவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.
இந்த சம்பவத்தை துப்பாக்கிச்சூடு என்று ஒட்டாவா பொலிஸார் முதலில் தவறாக தகவல் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், பொலிஸ் ஊடக சந்திப்பின் போது சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 19 வயதுடைய சந்தேகநபரின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
கொலை செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலை 3 முறை சரி செய்து, மூன்றாவது மின்னஞ்சல் செய்தியில் இருந்து இறுதி பெயர் பட்டியல் பெறப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்த தவறுகளை ஒப்புக்கொண்ட ஒட்டாவா காவல்துறை, கொலை விசாரணைகள் மிகவும் சிக்கலானது என்றும், அவ்வப்போது தகவல்கள் மாறுவதாகவும் கூறியுள்ளனர்.