இலங்கையில் இரு அரச நிறுவனங்களில் காணப்படும் 4,000 வெற்றிடங்கள்!
இலங்கையில் உள்ள இரு அரச நிறுவனங்களில் தற்போது 4,000 க்கும் மேற்பட்ட பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகிய நிறுவனங்களிலேயே இந்த வெற்றிடங்கள் கானப்படுகின்றன.
நிதி அமைச்சில் நேற்றையதினம் (26-09-2023) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றை இயக்குவதற்கும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கும் தற்போதைய பணியாளர்கள் போதுமானவர்கள்.
இந்த நிலையில் 'பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில், 3,292 அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் தற்போது 2,100 பேர் பணியிலுள்ளனர். 1,192 பதவி வெற்றிடங்கள் உள்ளன.
இதேவேளை, இலங்கை மின்சார சபையில் 24 ஆயிரம் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் பதவிகள் இருந்தாலும் 21 ஆயிரம் ஊழியர்களே சம்பளப் பட்டியலில் உள்ளனர்.
குறிப்பிட்ட சேவைப் பணிகளுக்காக 3,000 வெளி பணியாளர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
மேலும் 3,000 பணியாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களாக நியமிக்கப்பட வேண்டும்.
தற்போதைய அரசாங்கம் இந்த வெற்றிடங்களை அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
மாறாக, நாட்டின் நிலையான பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு மக்கள் விரும்பத்தகாத ஆனால் அவசியமான தீர்மானங்களை எடுத்துள்ளது எனவும் தெரிவித்தார்.