தாயால் விற்கப்பட்ட சிறுமி ;பிக்கு மற்றும் வியாபாரியால் பாலியல் துஷ்பிரயோகம்
அனுராதபுரம் அட்டமஸ்தானத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூத்த பிக்கு ஒருவராலும், தம்புள்ளை வியாபாரி ஒருவராலும் 14 வயதுச் சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, நேற்று (04.05.2026) அனுராதபுர நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 15 வயது எனக் கூறப்பட்ட நிலையில், அவர் தற்போது 14 வயது மற்றும் 4 மாதங்கள் நிரம்பியவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறுமி வழங்கிய தகவல்கள்
சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, சிறுமியின் தாயாரே 1 இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு பிக்குவிடம் சிறுமியை ஒப்படைத்ததாகச் சிறுமி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
பிக்கு தங்கியிருந்த அறை, அங்குள்ள கதவுகள் மற்றும் அலுமாரிகள் குறித்துச் சிறுமி வழங்கிய தகவல்கள் சம்பவ இட ஆய்வின் போது துல்லியமாகப் பொருந்தியுள்ளன. இது வழக்கின் முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது.
தம்புள்ளை பகுதியில் சிறுமியின் தாய் தேன் விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது, அங்குள்ள வியாபாரி ஒருவரால் சிறுமி பலமுறை வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான இட ஆய்வு நாளை நடைபெறவுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இந்த வழக்கில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. சந்தேக நபரான பிக்குவை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என மேல் மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்க இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாதது மற்றும் பொலிஸாரின் மெத்தனப் போக்கு குறித்துப் பல்வேறு தரப்பினரும் கவலை வெளியிட்டுள்ளனர்.
பொலிஸார் முறையாக விசாரணை நடத்திச் சந்தேக நபர்களைப் பெயரிடத் தவறினால், வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு மாற்றப்படும்.
அவ்வாறு நிகழும் பட்சத்தில், சட்ட ஆலோசனைகளைப் பெற 4 முதல் 5 ஆண்டுகள் வரை தாமதம் ஏற்பட்டு, குற்றவாளிகள் தப்பிக்கும் சூழல் உருவாகலாம் எனச் சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
வழக்கைத் திசைதிருப்பச் சில தரப்புகள் முயன்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.