வாகனம் கிடைக்காது 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு; போராட்டத்தில் குதித்த தோட்ட மக்கள்
அட்டன், வெளிஓயா 22 ஆம் இலக்க தோட்டத்தில் உள்ள 4 வயது சிறுவன் ஒருவர் நேற்று (02.01.2023) உயிரிழந்த நிலையில் பிரதேச மக்கள் போட்டத்தில் குதித்துள்ளனர்.
சுகவீனமுற்றிருந்த சிறுவனை, உரிய நேரத்துக்கு வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு வாகனம் இருக்கவில்லை. அத்தோடு வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதால் வெளியில் இருந்துகூட வாகனத்தை பெற முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையிலேயே இதற்கு மேலும் மக்கள் சாவதற்கு இடமளிக்க முடியாது என கூறி இன்று மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
சிறார்களும் போராட்டத்தில்
குறித்த வீதியை உடன் புனரமைத்து தருமாறு வலியுறுத்தி தோட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சிறார்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
சுமார் 2 கிலோ மீற்றர் வரையான வீதி குண்டும் குழியுமாக காணப்படுவதால் மழைக்காலங்களில் பாடசாலை மாணவர்கள், உயிரை கையில் பிடித்துக்கொண்டே பயணிப்பதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
சிறுவனின் மரணத்துக்கு இந்த வீதியும் ஒரு காரணம் என தெரிவித்த போராட்டகாரகள், இனியும் மக்களை பலிகொடுக்க நாம் தயாரில்லை. எமக்கான வீதி புனரமைக்கப்பட வேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால் அரசியல்வாதிகளை தோட்டத்துக்குள் விட மாட்டோ எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.