விஜயின் கூட்டத்தில் துயர சம்பவம் ; 6 குழந்தைகள் உட்பட 31 பேர் பலி
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்றிரவு கரூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து உரையாற்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி 6 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரணியன் தெரிவித்துள்ளார்.
விஜய் வேன் அருகே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இதனால் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே, பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார்.
அவர் நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர்.
அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து வைத்தியசாலையில் இருந்து வந்த தகவல்கள் அனைவரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.
அதன்படி, 2-வது கட்டமாக ஒரு பெண், 3 குழந்தைகள் உட்பட 10 உயிரிழந்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தொடர்ந்து வைத்தியசாலையில் மயக்கம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரூர் வைத்தியசாலையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட அதிகாரிகள் களத்தில் இருந்து மக்களுக்கு உதவி செய்து வருவதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 6 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரணியன் தெரிவித்துள்ளார்.
மேலும் 12 பேர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அரச வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டிகள் அணி வகுத்தபடி செல்லும் காட்சிகள் காண்போரை கலங்க வைப்பதாக உள்ளது.